போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாஜகவில் சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவி வகிப்பவர் ராகுல் லோதி. இவர் ஞாயிறன்று தனது பதவி விலகல் கடிதத்தினை இடைக்கால சபாநாயகர் ராமேஸ்வர் சர்மாவிடம் வழங்கினார். அதையடுத்து உடனடியாக மாநில பாஜக தலைமை அலுவலகம் சென்ற அவர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான், மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் ஷர்மா மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது ராஜிநாமா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா, ‘இரு நாட்களுக்கு முன்பாகவே ராகுல் லோதி தனது ராஜிநாமா கடிதத்தினை அளித்ததாகவும், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தான் கோரியதாகவும், ஆனால் சனிக்கிழமையன்று மீண்டும் தனது முடிவினை வலியுறுத்திய ராகுல், தற்போது ராஜிநாமா செய்து விட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 3-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.