தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீடாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நிதிச் சந்தையிலிருந்து கடன் பெற்று இத்தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். நாட்டின் பொருளாதாரமும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதார நெருக்கடியால் மாநிலங்களுக்கான வருவாயும் குறைந்தது.
மாநில அரசுகளின் வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் இரு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அந்தக் கடன் திட்டங்களுக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன; 21 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்தன.
இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், கோவா, குஜராத், ஹரியாணா, ஹிமாசல், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம், ஒடிஸா, தமிழகம், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்களுக்கும், தில்லி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு-சேவை வரி வருவாய் இழப்பீடாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நிதிச் சந்தையிலிருந்து 5.19 சதவீத வட்டிக்குக் கடனாகப் பெற்று, இத்தொகையை முதல் தவணையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. கடனுக்கான காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நடைமுறைக்கு 21 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேசங்களும் ஒப்புதல் தெரிவித்தன.
அவற்றில் 5 மாநிலங்களுக்கு சரக்கு-சேவை வரி வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. எனவே, மீதமுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களுக்கு வாரந்தோறும் ரூ.6,000 கோடியை கடனாகப் பெற்று அளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்தொகையானது மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையில் சோ்க்கப்படாது. மாறாக, மாநில அரசுகளின் மூலதன வருவாயாக சோ்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.