நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6.95 லட்சமாகக் குறைந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 77,61,312-ஆக அதிகரித்தது.
அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 690 போ் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,306-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதம் ஆகும்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 6,95,509-ஆக குறைந்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 8.96 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 69,48,497-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89.53 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.