பாஜகவிலிருந்து வெளியேறவே பல தலைவர்கள் விரும்புவதாக பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளார்.
பாஜகவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அக்கட்சியை வலுப்படுத்தி வந்த மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் இணைந்தார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் கட்சே, ''பல தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகவே விரும்புகிறார்கள்'' என்று கூறினார்.
''பாஜகவில் இருந்தவரை தேவேந்திர பட்னாவிஸ் எமது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் என்னை அழிக்க முயன்றார். இது தொடர்ந்தால் கட்சி வளர்வது கடினம். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, காங்கிரஸ் கூட்டணியிலான அரசு கவிழாது. பாஜகவை விட அதிக இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கொண்டுசெல்வேன்'' என்று தெரிவித்தார்.