நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.
தில்லி மெடிக்கல் கவுன்சிலின் கீழ் வரும் இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் மருத்துவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாத ஊதியத்தையாவது வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்து ராவ் மருத்துவமனை மருத்துவர்கள் ஊதியத்தை வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் இந்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் பேசியதாவது, ''கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், நாங்கள் போராடி வந்தோம். அதற்காக நாங்கள் கூடுதல் சலுகை வழங்கக் கேட்கவில்லை. எங்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தைத் தான் கேட்க்கிறோம்'' என்று கூறினார்.