பிகாரில் வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று பாஜக மூத்தத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பிகாரில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.பி.நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் பேசிய ஜே.பி.நட்டா, ''பிகாரில் தற்போது நடக்கவுள்ள தேர்தல் வேட்பாளர்களுக்கானது அல்ல. பிகாரின் எதிர்காலத்திற்கானது என்று கூறினார்.
இப்போது அரசியல் என்பது சாதி உள்ளிட்ட பிற பிளவுபடுத்தும் வாக்குகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. தகுதியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது.
கபில் சிபல் மூலம் காங்கிரஸ் கட்சி ராம ஜென்ம பூமியின் மீது தீர்ப்பை வழங்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இத்தகைய திசைதிருப்பும் தந்திரங்களே காங்கிரஸின் செயல்முறையாகும். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே, உச்சநீதிமன்றம் தினசரி விசாரணை மேற்கொண்டு ராமர் கோயில் விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது.
இளம் வாக்காளர்களைப் பற்றி கவலைப்படுவதைப்போன்று ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் இருக்கிறது. தன்னிறைவு பெற்ற இந்தியா மூலம் தன்னிறைவு பெற்ற பிகார் உருவாகும்.
வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி 19 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியைச் செய்யும்'' என்று அவர் தெரிவித்தார்.