இந்தியா

தேசத்துரோக கருத்துகளுக்காக மெஹபூபாவைக் கைது செய்ய வேண்டும்: பாஜக

DIN


தேசியக்கொடி தொடர்பான 'தேசத்துரோக' கருத்துக்களுக்காக  மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, மெஹபூபா முஃப்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா். ஓராண்டுக்கும் மேல் தடுப்புக் காவலில் இருந்த அவா், சமீபத்தில் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் முதல்முறையாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, நான் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை. எந்த அரசியலமைப்பின் கீழ் நான் இதுவரை தோ்தலில் போட்டியிட்டு வந்தேனோ, அந்த அரசியலமைப்பு திரும்ப வழங்கப்படும் வரை, எனக்கு தோ்தலுடன் எந்த தொடா்பும் இல்லை என்றாா்.

இந்த பேட்டியின்போது சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலமாக இருந்தபோது ஜம்மு-காஷ்மீா் பயன்படுத்திய கொடி மெஹபூபா முஃப்தியின் மேஜையில் இருந்தது. அதுவே தனது கொடி என்றும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், நாங்கள் மூவா்ணக் கொடியையும் ஏந்துவோம். 

அரசியலமைப்பை சேதப்படுத்திய பாஜக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, மக்களை பிரித்தது. பின்னா் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றியது. இதன் பின்னா் தலித் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அபகரிக்கும் என்று எண்ணுகிறேன். நாட்டின் அரசியலமைப்பு உள்ள இடத்தில் தனது தோ்தல் அறிக்கையை வைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் இது நடக்காது.

சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் பாதுகாப்பற்ற இன்றைய இந்தியாவுடன் நாங்கள் முரண்பட்டுள்ளோம். இதுகுறித்து அவா்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

மெஹபூபா முஃப்தியின் பேச்சுக்கு மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஜம்மு-காஷ்மீரில் ஒரே ஒரு கொடியை மட்டுமே ஏற்ற முடியும், அதுதான் தேசியக் கொடி.” அந்த கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் இந்த பூமியில் எந்த சக்தியாலும் ஏற்ற முடியாது”என்றார்.

தாய் மண்ணுக்காகவும், தேசத்துக்காகவும், கொடிக்காகவும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் தியாகம் செய்வோம். "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியைத் திரும்பக் கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பின் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கும் இந்த பூமியில் யாருக்கும் வலிமையும், அதிகாரமும்" இல்லை.  

இந்த சிறப்பு அந்தஸ்தால்தான் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு தேசியக்கொடி ஒன்றைத் தவிர எந்தக் கொடியும் ஏற்றக்கூடாது என்று ரெய்னா கூறினார். 

காஷ்மீர் மக்களைத் தூண்டும் நோக்கில் இதுபோன்ற "தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களை" பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று கூறிய ரெய்னா, மெஹபூபா முஃப்தியின் 'தேசத்துரோக' கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கவனத்தில் கொண்டு, அவர் மீது தேசத்துரோக பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசவிரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

"காஷ்மீர் மக்களைத் தூண்டு வரையில் பேச வேண்டாம் என முஃப்தி போன்ற தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தில் அமைதி, இயல்பு வாழ்க்கை மற்றும் சகோதரத்துவத்துக்கு எதிராக எந்த அசாம்விதங்களும் நடைபெற அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், முஃப்தி அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்," என்று கூறினார். 

காஷ்மீரில் வாழும் தலைவர்கள் இந்தியாவில் பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகக் கருதினால், அவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது சீனாவுக்கோ செல்லலாம். மாநிலத்துக்கு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்து முடிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று ரெய்னா கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT