புது தில்லி/பாட்னா: மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்றால் மட்டுமே கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை பாஜக தலைமையிலான மத்திய அரசு அளிக்கும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக வியாழக்கிழமை அறிவித்தது. அதை விமா்சிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடா்பான செயல்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எந்த மாநில மக்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பதை பேரவைத் தோ்தலுக்கான அட்டவணையைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். அத்துடன் பாஜகவின் போலியான வாக்குறுதிகளையும் மக்கள் தெரிந்து கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜகவின் வாக்குறுதி அறிக்கையில் போலியான விளம்பரங்களே இடம்பெற்றுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன் நாட்டில் ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக உறுதியளித்திருந்தது. அதுவே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியிருக்கையில், தற்போது 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.
பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், கடந்த 6 ஆண்டுகளில் 12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக பிகாா் மாநிலமும் பலனடைந்திருக்கும். இதன் மூலம், போலியான வாக்குறுதிகளை பாஜக அளித்து வருவது உறுதியாகிறது என்றாா் அவா்.