நாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் இயங்கவேண்டுமே தவிர பாஜகவின் திட்டத்தின் படி அல்ல என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக செயல்பட்டவர் மெகபூபா முப்தி. மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.
பல தலைவர்களும் ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மெகபூபா 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை பேசிய அவர், “மத்திய அரசால் சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்பற்ற வகையிலும் எங்களிடமிருந்து பறித்ததை நாங்கள் திரும்பப் பெறுவோம். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை தொடர வேண்டும். இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எங்கள் தைரியமும் உறுதியும் இந்த சவாலைக் கடக்க உதவும் என்று நான் நம்புகிறேன், ”என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டத்தின்படி இயங்கத் தேவையில்லை.” என மெகபூபா குறிப்பிட்டார்.