கொல்கத்தா: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகள், சீன ஊடுருவல், கரோனா நெருக்கடி போன்ற பிரச்னைகளில் பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் அண்மையில் நடைபெற்றபோது மத்திய அரசு உறக்கத்தில் இருந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு மத்திய அரசு அச்சப்படுவது ஏன்?
தேசப் பாதுகாப்பு, பொருளாதாரம், கரோனா பிரச்னைகளில் பிரதமர் மோடி மெளனம் காத்து வருகிறார். இந்த மூன்று விஷயங்களிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, தவறான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் கொடுத்து அவற்றை மறைப்பதிலேயே தீவிரமாக உள்ளது.
சீன ஊடுருவலை எதிர்த்து நமது வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர், அவர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. இது அரசியல் தலைமையின் தோல்விதான். அதேபோல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னலுக்கு ஆளாக நேரிட்டதற்கும் அரசின் தவறான கொள்கை முடிவுகள்தான் காரணம்.
கரோனா பெருந்தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. பொருளாதார சரிவை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீத சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அண்மையில் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தவறான தகவலைத் தெரிவித்துள்ளது என்று நம்மால் சொல்ல முடியுமா?
இருப்பினும், அடுத்த ஆண்டில் இதிலிருந்து மீண்டு 8.8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் இது சீனாவின் வளர்ச்சி விகித மதிப்பீடான 8.2 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் கணித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.