தெலங்கானா கனமழை வெள்ளத்திற்கு உதவும் வகையில் ஒடிசா மற்றும் மேற்குவங்க முதல்வர்கள் ரூ. 7 கோடி நிதியுதவி அறிவித்துள்ளனர்.
தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு ரூ.5,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக மத்திய அரசு உதவியையும் நாடியது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
ஒடிசா சார்பில் ரூ.5 கோடியும், மேற்கு வங்கம் சார்பில் ரூ.2 கோடியும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலங்கானா வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் மாநில மக்கள் சார்பில் நிதியுதவி வழங்குவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் ரூ.15 கோடியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சார்பில் ரூ.10 கோடியும் நிவாரணமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.