இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிப்பதாக துர்கா பூஜை இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
துர்கா பூஜை தொடங்குவது குறித்து மேற்குவங்க மக்களிடையே, காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், துர்கா பூஜை திருவிழா இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் ஒரு திருவிழா. இது வங்காளத்திலிருந்து வரும் மரபுகள் மற்றும் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும்.
கரோனா காலங்களில் துர்கா பூஜையை கொண்டாடுகிறோம், அனைத்து பக்தர்களும் முன்மாதிரியாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். விழாவில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் நம்பிக்கையும், பக்தியும் ஒன்றுதான். அதற்கான மகிழ்ச்சியும் எல்லையற்றவை. நம்பிக்கை பூரணமாக இருக்கும்போது, துர்கா தேவியின் ஆசீர்வாதம் நம்முடன் இருக்கும்.
விழாக்காலங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
மேலும், காணொலி வாயிலாக மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பங்கேற்று அங்குள்ள மக்களிடம் உரையாற்றினார்.