புது தில்லி: தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் மேல் முறையீட்டு வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 5 முதல் நீதிபதி பிரிஜேஷ் சேதி முன் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
2018-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உரிமை இல்லை என எதிர்தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
புதன்கிழமை தொடர்ந்த விசாரணையின்போது, "ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(1)(டி)க்கு விதிவிலக்கு சட்டம் இல்லாததால் இந்த மேல்முறையீடு நிலைக்கத்தக்கதல்ல என எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
அப்போது, எதிர்மனுதாரர் கரிம் மொரானி தரப்பில் மூத்த வழக்குரைஞர் சுதிர் நந்த்ரஜோக், "ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(1)(டி) தொடர்புடைய குற்றச்சாட்டில் இருந்து எதிர்மனுதாரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் 2018-இல்தான் நிகழ்ந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தில் அசைக்கமுடியாத உரிமை இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தை டிவிஷன் அமர்வுக்கு மாற்ற வேண்டும் அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட வேண்டும்' என்றார்.
இதையடுத்து, சிபிஐ சார்பில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "பிரிவு 13(1)(டி) தொடர்பாக எதிர்த்தரப்பினர் சுமார் 50 தீர்ப்புகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், இதுகுறித்த வாதங்களை முன்வைக்க கூடுதல் நேரம் தேவை' என்றார். அப்போது, நீதிபதி, "நாளை இந்த விவகாரம் குறித்து வாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் வியாழக்கிழமை பதில் அளியுங்கள்' என்றார்.