மறைந்த மும்பை ரெளடியும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நண்பருமான இக்பால் மிர்ச்சியின் ரூ. 22.42 கோடி மதிப்பிலான சொத்துகளை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல ரெளடி இக்பால் மிர்ச்சி நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இவரது குடும்பத்தினர் மீது பல பொருளாதாரக் குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் இக்பால் மிர்ச்சி லண்டனில் 2013-இல் இறந்தார்.
மிர்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ. 798 கோடி சொத்துகளைக் கையகப்படுத்த அமலாக்கத் துறை பல ஆணைகளைப் பிறப்பித்திருந்தது. இதில் வெளிநாடுகளிலுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ. 203 கோடி ஆகும்.
அதன் அடிப்படையில், பண மோசடி வழக்கில், மும்பை, பஞ்சகனி பகுதியில் உள்ள பண்ணைவீடு, திரையரங்கம், ஓட்டல், 3.5 ஏக்கர் நிலம் உள்ளிட்ட ரூ. 22.42 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல்காரராக இருந்த இக்பால் மிர்ச்சி, மும்பை மாநகரிலும் சுற்றுவட்டாரத்திலும் பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக அமலாக்கத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.