காவலர்களின் தியாகம் மற்றும் பணி என்றுமே நினைவுகூரத்தக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்களின் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த இன்று கடைப்பிடிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''காவலர் வீர வணக்க நாள் என்பது காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவிப்பதாகும்.
நாட்டுக்காக ஆற்றும் கடமையின்போது உயிர்த்தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
''சட்டம் ஒழுங்கை காப்பதிலிருந்து குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வரை, பேரிடர் மீட்புப் பணிகள் முதல் கரோனாவுக்கு எதிரான போராட்டம் வரை நமது காவலர்களின் பணி அளப்பறியது. காவல்துறையின் தயார்நிலை மற்றும் விடாமுயற்சி பெருமிதமளிக்கிறது'' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.