பெங்களூரு: அக்டோபர் 13-ம் தேதி முதல் பெங்களூருவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், உள் நோயாளிகளின் வருகை குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
சில மருத்துவமனைகளில் கரோனா பாதித்து உள்நோயாளிகளாக வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்களின் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
நிச்சயம் இது எங்களுக்கு ஒரு நிம்மதி அளிக்கும் செய்தியாகும். சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் இரவு பகலாக உழைத்தோம். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்து, லேசான அறிகுறி இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதால் தற்போது மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது என்று விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூத்த மருத்துவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை அனைத்து படுக்கை வசதிகளும் நிரம்பியிருந்தன. ஆனால் தற்போது 30 படுக்கை வசதிகள் காலியாகவே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இன்னமும் நிரம்பி வழிகின்றன. இது குறித்து ராஜீவ் காந்தி நெஞ்சக நோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் சி. நாகராஜா கூறுகையில், மாநிலம் முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த மாதங்களில் மிகவும் மோசமான நிலையில் வரும் நோயாளிகள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது அது வெகுவாகக் குறைந்துள்ளது என்றார்.