காவலர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் 1959-ஆம் ஆண்டில் சீனப்படைகளால் பதுங்கியிருந்து கொல்லப்பட்ட 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காவலர் வீர வணக்கநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்களின் வீர வணக்கநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தவகையில் இன்று (செவ்வாய்க் கிழமை) காவலர்களின் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள வெங்கையா நாயுடு, ''நாட்டைப் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உயிர்நீத்த காவலர்களுக்கு, காவலர்களின் வீர வணக்க நாளையொட்டி மரியாதை செலுத்துகிறேன். காவலர்களிஅன் வீரத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும், ஈடுபாட்டுக்கும் நாடு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.