பெங்களூரு: இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற விங் கமாண்டர் (ஓய்வு) டாக்டர். விஜயலஷ்மி ரமணன் காலமானார். அவருக்கு வயது 96.
விஷிஸ்ட் சேவா பதக்கம் பெற்ற விஜயலஷ்மி ரமணன், வயது முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மிகவும் அமைதியான வகையில் அவரது மகள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை எய்தியதாக அவரது மருமகன் எஸ்.எல்.வி. நாராயண் தெரிவித்துள்ளார்.
1924-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த விஜயலஷ்மி, எம்பிபிஎஸ் முடித்து ராணுவ மருத்துவப் பிரிவில் 1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியில் சேர்ந்தார். பிறகு இந்திய விமானப் படையில் இணைந்தார்.
இந்திய விமானப் படையின் பல்வேறு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றியவர். போர்க்காலங்களில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும், நிர்வாகத் துறையிலும் பணியாற்றியவர்.
1972-ஆம் ஆண்டு விஜயலஷ்மி விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரது கணவர் மறைந்த கே.வி. ரமணன், இந்திய விமானப் படையின் அதிகாரியாக இருந்தவர். விஜயலஷ்மி அவரது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.