மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான ஏக்நாத் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்ர பாஜகவின் முக்கிய தலைவராக இருப்பவர் ஏக்நாத் கட்சே. பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சே பாஜகவிலிருந்து விலக உள்ளதாக தகவல் பரவியது.
அதனை உறுதிபடுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவருக்கு கட்சே ராஜிநாமா கடிதத்தை புதன்கிழமை அனுப்பினார்.
இதுகுறித்து பேசிய மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெயந்த் பட்டீல், “கட்சே முறைப்படி விரைவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட உள்ளார்.” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரம் முழுவதும் செல்வாக்கு பெற்ற ஏக்நாத் கட்சேயின் விலகல் அம்மாநில அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.