பாஜக பெண் அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திடம் இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து கமல்நாத் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கமல்நாத்தின் நிலைப்பாடு குறித்து 48 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக:
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தாப்ரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில அமைச்சர் இமர்தி தேவி குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
கமல்நாத்தின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கமல்நாத்தை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் சௌஹான் கடிதம் எழுதியிருக்கிறார்.
கமல்நாத்தின் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கமல்நாத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவதூறுப் பேச்சு சர்ச்சையானதையடுத்து, கமல்நாத் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.