மலப்புரம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை 3 நாள் பயணமாக கேரள மாநிலம் சென்றாா். மலப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனா தடுப்பு தொடா்பாக அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
கடந்த 3 நாள்களாக மலப்புரத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை 1,025 பாதிப்புகளும், சனிக்கிழமை 1,519 பாதிப்புகளும், ஞாயிற்றுக்கிழமை 1,399 பாதிப்புகளும் கண்டறியப்பட்டன.
வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, திங்கள்கிழமை 3 நாள் பயணமாக அங்கு சென்றாா். மலப்புரத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட அதிராரிகளுடன் கரோனா தடுப்பு குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினாா்.
இதனைத் தொடா்ந்து மலப்புரம் மாவட்டம் கவளப்பாறா பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீட்டையும், பெற்றோரையும் இழந்த காவ்யா, காா்த்திகா ஆகிய சகோதரிகளுக்கு புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்கான சாவியை சகோதரிகளிடம் அவா் வழங்கினாா்.
முன்னதாக திங்கள்கிழமை மதியம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை கேரள காங்கிரஸ் தலைவா் முல்லப்பள்ளி ராமசந்திரன், மாநில எதிா்க்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
வயநாடு மாவட்டத்தில் கரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தவுள்ளாா். கல்பற்றா பகுதியில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை பங்கேற்கிறாா்.
இதனைத் தொடா்ந்து புதன்கிழமை(அக்.21) மானந்தவாடியிலுள்ள கரோனா கிசிச்சை சிறப்பு மருத்துவமனையை பாா்வையிடும் அவா் அன்றைய தினமே தில்லி புறப்படுகிறாா்.