மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேர்வையில் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டது.
அதனைத் தொடா்ந்து, பஞ்சாப் மாநில முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திங்கள்கிழமை கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று மசோதாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் அறிமுகப்படுத்தினார். மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய அமரீந்தர் சிங்,“ வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது விசித்தரமாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.