மத்தியப் பிரேதச காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், அமைச்சர் இமார்த்தி தேவி குறித்து மரியாதை குறைவாக பேசியது துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரிலுள்ள தாப்ரா நகரில் நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக வேட்பாளராக இமார்த்தி தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், இமார்த்தி தேவி குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
கமல்நாத்தின் இந்தக் கருத்துக்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இதுபற்றி, கேரள மாநிலம் வயநாட்டில் முகாமிட்டுள்ள ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"பெண்களை யாரும் மரியாதை குறைவாக நடத்தக் கூடாது. கமல்நாத் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் பயன்படுத்திய மொழி எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. இதை நான் ஊக்குவிக்க மாட்டேன். அவர் இவ்வாறு பேசியது துரதிருஷ்டவசமானது."
இதனிடையே, கமல்நாத்தின் கருத்து குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கமல்நாத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அவரைக் கட்சியின் அனைத்துப் பதிவியிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடிதம் எழுதியுள்ளார்.