கரோனா தொற்றால் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தொற்றுப் பரவலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 112 ஆண்டுகளில் காசிரங்கா தேசியப் பூங்கா மிகநீண்ட நாள்களாக மூடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட 5 தேசிய பூங்காக்கள் மற்றும் 18 வனவிலங்கு சரணாலயங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதனையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.