கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக நீடிக்க மாட்டார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசகெளடா யட்னால் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தின் பிஜாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசகெளடா யட்னால். இவர் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் தெரிவித்தக் கருத்து கர்நாடகத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் பேசிய பசகெளடா, முதல்வர் எடியூரப்பாவின் செயல்களால் கட்சியின் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,“ முதல்வர் எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவார். வடக்கு கர்நாடகாவில் உள்ள 100 சட்டமன்ற உறுப்பினர்களால் தான் அவர் முதல்வராக உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன். அடுத்த முதல்வர் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவராக தான் இருப்பார் என மோடி என்னிடம் உறுதியளித்துள்ளார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசகெளடா தெரிவித்துள்ள கருத்து கர்நாடக அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.