பிகார் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கைமூர் மாவட்டத்தின் ராம்கரில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து நமது ராணுவத்தினர் மீது கை வைக்க முடியாது. பிளவுபட்ட இந்தியா எனும் கோஷம் ஒடுக்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் ஒரே இந்தியா சிறப்பான இந்தியா எனும் கோஷம் மட்டுமே தற்போது உள்ளது.” எனத் தெரிவித்தார்.
மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரின் நலனுக்காக செயல்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தால் பீகார் பயனடைகிறது. நிதீஷ் மற்றும் மோடி அரசு பீகார் ஏழைகளுக்கு இலவச ரேஷன் மற்றும் எரிவாயுவை வழங்கியுள்ளது.” எனத் தெரிவித்தார்.