முந்தைய பயணத்தில் முகக்கவசம் அணியாத நபர்கள் தங்கள் அடுத்த பயணத்திற்கு முன்பதிவு செய்ய, முகக்கவசம் அணிந்திருப்பதைக் காட்டும் செல்பியை எடுத்து அனுப்ப வேண்டும் என பிரபல கால் டாக்சி நிறுவனமான ஊபர் தெரிவித்துள்ளது.
பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக, கரோனா தொற்று தொடக்க காலத்தில், பயணத்தின்போது ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்க மொபைல் ஆப்பில் செல்பி கிளிக் செய்யும் ஒரு ஆப்ஷனை ஊபர் நிறுவனம் கூடுதலாக சேர்ந்திருந்தது.
அதன்படி, கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியா முழுவதும் 170 லட்சத்துக்கும் அதிகமான சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டு, முந்தைய பயணங்களில் முகக்கவசம் அணியவில்லை என ஓட்டுநர்களால் புகார் தெரிவிக்கப்பட்டவர்கள், தங்கள் அடுத்த பயணத்தில் முன்பதிவு செய்யும்போது தாங்கள் முகக்கவசம் அணிந்த செல்பியை மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.