கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதுமான கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் அவ்வப்போது தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மார்ச் மாதத்தில் தனது சேவைகளை நிறுத்தி மெட்ரோ, தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பயணிகள் கரோனா சமூக விலகலைக் கடைப்பிடிக்க அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர்கள் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை செய்த பின்னரே மெட்ரோவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், அக்டோபர் 25 முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை மொத்தம் 15,95,381 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 13,69,810 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 42,115 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.