ஓணம் பண்டிகைக்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்று கூறுவது தவறு என கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
கேரளத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கருத்து தெரிவிக்கையில், "ஓணம் கொண்டாட்டத்துக்காக கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதற்கான பலனை கேரளம் அனுபவிக்கிறது" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்ததாவது:
"கரோனா தொற்று பரவலைத் தாமதப்படுத்தியதற்கு நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இத்தாலியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்தபோது 100 பேர் பாதிக்கப்பட்டால் 16 பேர் பலியாகி வந்தனர். கேரளத்தில் மே மாதத்தில் 0.77 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம், செப்டம்பரில் 0.38 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இன்றைய தேதி வரை அக்டோபரில் 0.25 சதவிகிதமாக உள்ளது.
நாட்டின் முதல் கரோனா பாதிப்பு கேரளத்தில் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதன்பிறகு பரவல் இல்லை. கரோனா தொற்றின் தொடக்க காலத்தில் நாங்கள் செய்ததை அனைவரும் பாராட்டினர். நாங்கள் விருதுக்குப் பின்னால் செல்லவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்தியதற்காக எங்களுக்குப் பாராட்டுகள் கிடைத்தபோது சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.
ஓணத்தின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்று கூறுவது தவறு. முறையான கட்டுப்பாடுகளுடனே அனைத்தும் பின்பற்றப்பட்டன. கேரளத்தை மோசமான வெளிச்சத்தில் நிறுத்துவதற்காக சில பகுதிகளிலிருந்து ஒருங்கிணைந்த முயற்சிகள் அரங்கேறி வருகின்றன."