உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குடும்பத்தினரை அடைத்து வைத்து இளம்பெண்ணின் உடலை எரித்த மாவட்ட காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து காலையில் பெண்ணின் உடலை தகனம் செய்வதாகக் கூறிய பெற்றோர்களின் கோரிக்கையையும் மீறி இரவோடு இரவாக இளம்பெண்ணின் உடலை காவல்துறையினர் எரித்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணையின்போது முரண்பாடான தகவல்களை அளித்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் உள்பட 4 காவலர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பேசிய உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி, இளம்பெண் உடலை எரித்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், வட்டார அலுவலர் ராம் ஷாப், காவல் ஆய்வாளர் தினேஷ் குமார், காவல் துணை ஆய்வாளர் ஜாக்வீர் சிங் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.