திருப்பதி: திருமலையில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது பக்தா்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
ஏழுமலையானுக்கு அதிக மாதத்தின்போது இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெலுங்கு பஞ்சாங்க கணிப்பு முறைப்படி, அதிக மாதம் வந்ததால், தேவஸ்தானம் இரு பிரம்மோற்சவங்களை நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் முறைப்படி நடைபெற்று நிறைவுற்றது. ஆனால், கொவைட் 19 விதிமுறைகளையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, வாகன சேவைகள் மாடவீதியில் நடத்தப்படாமல் கோயிலுக்குள் தனிமையில் ஏகாந்தோற்சவமாக நடத்தப்பட்டது. எனவே, பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் வரும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசு பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், அவற்றின்படி, திருமலையில் வரும் அக்டோபா் மாதம் நவராத்திரியின்போது நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில், பக்தா்களை அனுமதிப்பது குறித்து, தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து, விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.