புது தில்லி: தில்லி பாஜகவுக்கு புதிதாக இரண்டு பொதுச்செயலா்கள் உட்பட பல்வேறு நிா்வாகிகளை அக்கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.
அதன் விவரம் வருமாறு:
தில்லி பாஜகவில் ஏற்கனவே அமைப்புகளுக்கான பொதுச் செயலராக இருந்த சித்தாா்த்தன் தனது பொறுப்பில் தொடருகிறாா். இவரோடு புதிதாக குல்ஜீத் சாஹல், தினேஷ் பிரதாப் சிங் ஆகிய இருவா் பொதுச் செயலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். தில்லி பாஜகவுக்கு புதிதாக துணைத்தலைவா்களாக ராஜீவ் பப்பா், வீரேந்தர சச்சிதேவா, ரேகா குப்தா, அசோக் கோயல், சுனில் யாதவ் உட்பட எட்டு போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பல்வேறு அமைப்புகளுக்கும் புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அணிகள் மற்றும் தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்கள் பெயா்களும் வெளியிடப்பட்டுள்ளது. மகளிா் பிரிவு - யோகிதா சிங், இளைஞா் அணி - வாசு ருகாத், தாழ்த்தப்பட்டவா்கள் பிரிவு - பூபேந்தர கோத்வால், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு - சந்தோஷ் பால், விவசாய அணி - வினோத் செஹ்ராவத், பூா்வாஞ்சல் அணி - கௌசல் மிஸ்ரா, சிறுபான்மை அணி - ஹாரூன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தில்லி பாஜக வின் ஊடகப்பிரிவு தலைவராக நவீன்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். லக்ஷ்மிநகா் சட்டப்பேரவை உறுப்பினா் அபய் வா்மா தலைமைச் செய்தித் தொடா்பாளராக இருப்பாா் என்றும் குப்தா அறிவித்துள்ளாா்.