புது தில்லி: இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் காலிஸ்தான் போன்ற இயக்கத்தை ஊக்குவிக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, சமூக ஊடகமான சுட்டுரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மறுத்து
விட்டது.
இது தொடர்பாக, சங்கீதா சர்மா சார்பில், வழக்குரைஞர்கள், தேஷ் ரத்தன் நிகாம் மற்றும் அவனிஷ் சின்ஹா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்: சுட்டுரை மற்றும் இந்தியாவில் உள்ள அதன் பிரதிநிதிகள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், தேசத் துரோகம் மற்றும் நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பது தொடர்புடைய இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காலிஸ்தான் தொடர்பான செய்திகளை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் நபர்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து வருவதால் இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும். சுட்டுரை நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு இங்கு வரி விதிக்க வேண்டும். அதன் மூலக் குறியீட்டை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, "மனுவில் கூறப்பட்டுள்ள எந்த விவகாரங்களும் இந்திய ஒன்றியத்தின் முன் சுட்டிக்காட்டப்படவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கோரிக்கையையும், பொது களத்தில் வெளியான செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என நீதிபதிகள் கூறினர்.
மேலும், நீதிமன்றத்தை நாடுவதற்கு முன், மனுதாரர் தனது குறைகளை முதலில் அரசு நிர்வாகத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மாவின் வாதத்தை குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் சங்கீதா சர்மா, மத்திய அரசிடன் தனது கோரிக்கையை முன்வைப்பதற்கு ஏதுவாக மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனர்.