புது தில்லி: உ.பி.காவல்துறைக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உத்தரப்பிரதேசம் வந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் தடுத்ததால் அவர்கள் ஹாத்ராஸ் பகுதி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் உ.பி.காவல்துறைக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:
எதற்காக உ.பி.காவல்துறை ராகுல் மற்றும் பிரியங்காவை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்? அவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாலும் அந்த நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுவிக்கும்.
அவர்கள் இருவரும் வன்முறையாக நடந்து கொள்ளவில்லை; கையில் ஆயுதங்கள் எதையும் கொண்டு செல்லவில்லை. அவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை அவ்வாறு போராட்டம் நடத்த விடாமல் காவல்துறை ஏன் தடுத்தது?
உ.பி.காவல்துறைக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா? இந்த நாட்டின் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாதா? ஒரு கொடூர குற்றத்திற்கு எதிராக ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் போராட்டம் நடத்துவதிலும், பாதிகப்பட்டவர்களின் குடும்பத்தைச் சென்று சந்திப்பதிலும் என்ன தவாறு இருக்கிறது?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.