கொச்சி: கேரள விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயா் அரசு சாட்சியாக மாற சம்மதம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் சந்தீப் நாயா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘நான் அளிக்க விரும்பும் வாக்குமூலம் எனக்கு எதிரான ஆதாரமாக மாறவும் வாய்ப்புள்ளது என எனக்குத் தெரியும்’ என்று தெரிவித்துள்ளாா்.
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முந்தைய ஊழியா்களான ஸ்வப்னா சுரேஷ், சரிதா ஆகியோா் அந்தத் தூதரகத்தின் பேரில் கேரளத்துக்கு தங்கம் கடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் சுமாா் ரூ.100 மதிப்பிலான தங்கத்தை கேரள விமான நிலையங்கள் வழியாக இந்தியாவுக்கு அவா்கள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்ஐஏ, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன.
ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகியோா் பெங்களூருவில் ஜூலை 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். நான்கு போ் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கேரள முதல்வரின் முதன்மைச் செயலா் சிவசங்கருக்கும் தொடா்பு உள்ளதா என சுங்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக உள்ளவா்களுக்கு எதிராக புளூ காா்னா் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.