மும்பை: நிலத்தை வாங்கி 80 மாதங்களுக்கு மேலான பிறகும் வாங்கியவருக்கு அதை ஒப்படைக்காத மனை வணிக நிறுவனத்துக்கு ரூ.5.04 கோடி அபராதம் விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ரினைசன்ஸ் என்ற மனை வணிக நிறுவனத்திடம் ஒருவர் 6 மனைகளையும், சில கிடங்கு கட்டடங்களையும் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாங்கியுள்ளார். அப்போது இருதரப்பும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 2010-ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதிக்குள் வாங்கியவருக்கு நிலத்தை ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், மனைகளை வாங்கியவரிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிலம் வாங்கியவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகியுள்ளார். இதையடுத்து நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும், தாமதமான காலத்துக்கு மனை வணிக நிறுவனம் ரூ.5.04 கோடியை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், அதை ஏற்காத மனை வணிக நிறுவனம், இதை எதிர்த்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. ஆணையத்தின் விதிகளின்படி இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை தீர்ப்பாயத்திடம் செலுத்தினால் மட்டுமே மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடியும் என்று கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இழப்பீடு தொகை செலுத்தப்படாததால் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை எதிர்த்து மனை வணிக நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது. இந்நிலையில் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை உறுதி செய்த நீதிபதி எஸ்.சி.குப்தே, சம்பந்தப்பட்ட நிறுவனம் 4 வாரங்களுக்குள் ரூ.5 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.