புது தில்லி: புது தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் ஜே.என்,யு முன்னாள் மாணவர் உமர் காலித் தில்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜே.என்,யு முன்னாள் மாணவர் உமர் காலித் கடந்த மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டார்.
அந்த வழக்கில் வியாழனன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வரும் 22-ஆம் தேதி அவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
அதையடுத்து வடக்கு தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கில் காலித்தை தில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.