புது தில்லி: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் ரூ.4.34 லட்சம் கோடி அளவுக்குக் கடன் பெறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் அதிகமாக செலவிட்டு வருகின்றன. அதனால் அவை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.7.66 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாகப் பெற்றது. அக்டோபர் மாதம் வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இரண்டாவது அரையாண்டில் ரூ.4.34 லட்சம் கோடியை கடனாகப் பெறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் அரசு நிதிப் பத்திரங்களை விற்பதன் மூலமாக ரூ.7.80 லட்சம் கோடி கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.