பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பிகர் மாநிலம் பாடனவிற்கு அருகேயுள்ள பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேஷ் குமார் ஜா என்னும் ராஜூ பாபா. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் அந்த வட்டார பாஜக தலைவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் ராஜூ பாபா வியாழன் காலை பூர் பகுதியில் காலை நடைபயிற்சிக்குச் சென்ற போது, அங்குள்ள சீதா ராம் கல்யாண மண்டபத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். சுருண்டு விழுந்த ராஜு அந்த இடத்திலேயே மரணமடைந்தார். கொலைகாரர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபடியே அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாட்னா (தெற்கு) காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘கொலைக்கான காரணம் என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம். அல்லது கொலையானவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதால் தொழில் போட்டியாகக் கூட இருக்கலாம். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.