கர்நாடகா மாநிலம் பெலகாவி மக்களவைத் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்கு இடமில்லை என அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பெலகாவி மக்களவைத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், பெலகாவி தொகுதியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த எந்த சமூகத்தினருக்கும் வாய்ப்பளிப்போம். ஆனால், முஸ்லிம்களுக்கு இடமில்லை.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த லிங்காயத்துகள், குருபாக்கள், வக்காலிகாக்கள் அல்லது பிராமணர்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்களே தவிர முஸ்லிம் மதத்தினரை வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம்.
மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும். பெலகாவி இந்துத்துவாவின் மையமாக உள்ளது. எனவே, முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடமில்லை' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.