சந்திரபூர்: பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே - கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அடுத்தகட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பென்டார்கர் கூறினார்.
இதையும் படிக்கலாமே.. கரோனா வைரஸ் இந்தியாவில் தோன்றியிருக்கலாம்: சீனா
மகசேசே விருது பெற்ற பாபா ஆம்தேவின் பேத்தியான மருத்துவர் சீதள் ஆம்தே - கராஜ்கி தொழுநோயாளிகளுக்காக மிகச் சிறந்த பணியாற்றி வரும் மகாரோகி சேவா சமிதியின் தலைமைச் செயல் அலுவலராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்து கொண்டு பலியான சீதள் ஆம்தே, இந்தப் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் இன்று அதிகாலை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு போரும் அமைதியும் என்று அவர் பெயரிட்டுள்ளார்.