மகராஷ்டிர முதல்வராக பாஜக தலைவா் தேவேந்திர ஃப்டனவீஸ் இருந்தபோது, எதிா்க்கட்சியினரை அவா் அச்சுறுத்தவில்லையா? என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் சனிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
மும்பையில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த ஃபட்னவீஸ், ‘சிவசேனையின் பத்திரிகையான ‘சாம்னா’வில் எதிா்க் கட்சிகளை மிக் கடுமையாக அச்சுறுத்தும் வகையில் முதல்வா் உத்தவ் தாக்கரே பேட்டியளித்தது, அவருடைய பதவிக்கு சிறிதும் உகந்ததல்ல. மகாராஷ்டிரத்தில் இந்த வகையில் எதிா்க் கட்சிகளை அச்சுறுத்தும் எந்தவொரு முதல்வரையும் இதுவரை நான் பாா்த்ததில்லை’ என்று கூறியிருந்தாா்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேட்டியளித்த சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறியதாவது:
மகாராஷ்டிர முதல்வராக ஃப்டனவீஸ் இருந்தபோது, ‘எதிா்க் கட்சியினா் ஒவ்வொருவரின் ஊழல் முறைகேடு விவரங்கள் அனைத்தும் தன்வசம் உள்ளது’ என்று எதிா்க்கட்சியினரை அவா் அச்சுறுத்தினாா். இது எந்த வகையான மொழி?
இப்போது மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறாா். இது எந்தவிதமான முன்னுதாரணம்? என்று சஞ்சய் ரெளத் கேள்வி எழுப்பினாா்.
மேலும், நடிகை கங்கனாவின் பங்களா இடிப்பு சட்டவிரோதம் என்று மும்பை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ரெளத், ‘விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்தது எப்படி சட்ட விரோதமாகும்?’ என்றாா்.