இந்தியா

இந்தியாவின் கலாசாரம் உலக மக்களை ஈர்ப்பதாக உள்ளது: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

DIN

தேவி அன்னபூர்ணாவின் பழங்கால சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தேவி அன்னபூர்ணாவின் பழங்கால சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையறிந்த ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு 1913 ஆம் ஆண்டில், இந்த சிலை வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு கடத்தப்பட்டது. 

நாட்டில் பாரம்பரியத்துடன் கூடிய விலை மதிப்புமிக்க மரபுச் சின்னங்களும், அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம். 

இந்தியாவின் கலாசாரம் மற்றும் வேதம் முழு உலகையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. அவற்றைத் தேடி பலர் நம் நாட்டிற்கு  வந்து இங்கு தங்கி இந்தியாவின் கலாச்சார தூதர்களாக தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர். 

சில நாள்கள் முன்பாக உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வாரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு, அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 'விஸ்வநாத்' என்றும் அழைக்கப்படும் ஜோனாஸ் மசெட்டி நம் நாட்டின் கலாசாரங்கள் மற்றும் வேதங்களை அங்குள்ள மக்களுக்கு எடுத்துக்கூறுகிறார். அவர் 'விஸ்வவித்யா' என்ற அமைப்பின் மூலம் இதனைச் செய்து வருகிறார். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இவர் வசித்து வருகிறார். 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு, ஜோனாஸ் பங்குச்சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவர் இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட வேதாந்தாவில் பயின்று கோவையில் அர்ஷா வித்யா குருகுலத்தில் 4 ஆண்டுகள் பயின்றார். அவரது முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குரு நானக்கின் 551 ஆவது பிறந்தநாளை நாளைய தினம்(நவ. 30)சிறப்பாகக் கொண்டாடுவோம். வான்கூவர் முதல் வெல்லிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது

டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஸ்ரீ அரவிந்தர் மறைந்த நாள். ஸ்ரீ அரவிந்தரை நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குள்ளே ஆழம் ஏற்படுகிறது.

உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT