விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் என ஒருபோதும் கூறவில்லை, கூறவும் மாட்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா தெரிவித்ததாவது:
"புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அடைபட்ட அமைப்பு முறையிலிருந்து விவசாயிகள் வெளியேறவுள்ளனர். அரசியல் ரீதியாக இதை எதிர்க்க நினைப்பவர்கள் எதிர்க்கட்டும்.
நான் விவசாயிகள் போராட்டத்தை அரசியல் என்று ஒருபோதும் கூறவில்லை, கூறவும் மாட்டேன்" என்றார்.
முன்னதாக, போராட்டத்தை தில்லி புராரி மைதானத்துக்கு மாற்றியவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா, விவசாயிகளிடம் தெரிவித்தார். ஆனால், அமித் ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர்.