நாட்டில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலமாக நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று அவர் நாட்டின் கலாசாரம், வேளாண் சட்டங்கள், நாட்டின் தலைவர்கள் குறித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து கரோனா தடுப்பூசி குறித்து பேசிய அவர்,
கரோனா பொதுமுடக்கத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில், தற்போது கரோனா தடுப்பூசி குறித்து விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் வைரஸுக்கு எதிராக நாம் தொடர்ந்து உறுதியாக போராட வேண்டும்.
2020 ஆம் ஆண்டு முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளுடன் நாம் முன்னேறுவோம். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.
கரோனா விஷயத்தில், நாம் கொஞ்சம்கூட கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. கரோனாவைத் தடுக்க அரசின் விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
மேலும், 'முன்னதாக நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வாழ்வில் புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. விவசாயிகள் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கின்றன' என்று கூறிய அவர், வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள். அன்று அவர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றல்களை நாம் மீள் பதிவு செய்துகொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.