'புலிகளின் மாநிலம்' என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில் 2020-ஆம் ஆண்டில் இதுவரை 26 புலிகள் இறந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, கடந்த ஆறு ஆண்டுகளாகவே புலிகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. புலிகளின் பிறப்பு விகிதத்தை விட இறப்பது அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மத்தியப் பிரதேசத்தில் 124 புலிக்குட்டிகள் இருந்தன. அடுத்த கணக்கெடுப்பின்போது இது 600-ஆக உயர வாய்ப்புள்ளது.
புலிகளின் எண்ணிக்கையை விட புலிகளுக்கான இடம் குறைவாக உள்ளதும் புலிகள் இறப்பதற்கான முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
பந்தவ்கர் தேசிய புலிகள் பாதுகாப்பகத்தில் 90 புலிகளை பாதுகாப்பதற்கான இடம் மட்டுமே உள்ள நிலையில், 125 புலிகள் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள தகவலின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்தியப் பிரதேசத்தில் 21 புலிகள் இறந்துள்ளன. இதில் 10 புலிகள் பந்தவ்கர் தேசிய பூங்காவைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் புலிகளின் இறப்பு பதிவாகவில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டு 28 புலிகள் இறந்தன. இதில் 3 புலிகள் வேட்டையாடப்பட்டதன் மூலம் இறந்தன.
நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள கர்நாடகத்தில் இந்த ஆண்டு 8 புலிகள் இறந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஆண்டு 12 புலிகள் இறந்துள்ளன.