காங்கிரஸ் தலைவா்கள் அகமது படேல், தருண் கோகோய் ஆகியோரின் மறைவுக்கு அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் கட்சிக்கு அளித்த பங்களிப்பை பாராட்டி தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி எம்.பி.ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் அகமது படேல் குறித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் கூறப்பட்டதாவது:
காங்கிரஸ் கட்சியின் அங்கமாக சுமாா் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவா் அகமது படேல். இளைஞா் காங்கிரஸ் தொண்டா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா், செயற்குழு உறுப்பினா், கட்சித் தலைமையின் செயலா், பொருளாளா் என பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சிக்கு பங்களித்துள்ளாா். அனைத்து பொறுப்புகளையும் அா்ப்பணிப்புடன், கட்சியின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டாா். இதன் மூலம் கட்சிக்கு தன்னலமின்றி சேவை புரிந்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் தருண் கோகோய் குறித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘காங்கிரஸின் பெருமைக்குரிய தலைவா் தருண் கோகோய். சுமாா் 40 ஆண்டுகளாக கட்சியின் வலிமைமிக்க தலைவராக திகழ்ந்தாா். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்குப் பகுதியின் மிகப் பெரிய தலைவராக இருந்தாா். பல்லாண்டுகளாக அந்தப் பகுதி மக்களின் நலன்களுக்காக குரல் எழுப்பியவா்’ என்று தெரிவிக்கப்பட்டது.