புது தில்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவ. 28) நடைபெற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் பணி மாறும் நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
முதலாவது கூர்கா படைப்பிரிவின் ஐந்தாவது பிரிவு தனது மூன்றரை ஆண்டுப் பணியை நிறைவு செய்துள்ளதை அடுத்து சீக்கியப் படைப்பிரிவின் ஆறாவது பிரிவிடம் தனது பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
ராணுவத்தின் பல்வேறு காலாட்படைப் பிரிவுகள் சுழற்சி முறையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.
இந்த ராணுவ பாதுகாப்புப் படை, குடியரசு தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதுடன், முக்கிய விருந்தினர்களின் வருகையின்போது அணிவகுப்பு மரியாதையை அளிப்பது, குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, முப்படையினரின் பாசறை திரும்பும் விழா ஆகியவற்றிலும் பங்கேற்கும்.