ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன.
முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜம்முவில் 124 வேட்பாளர்கள், காஷ்மீரில் 172 வேட்பாளர்கள் என மொத்தம் 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
டிசம்பர் 19 ஆம் தேதி எட்டாவது கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து, டிசம்பர் 22 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இன்று நடைபெற்று வரும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுடன் 12,153 பஞ்சாயத்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் சனிக்கிழமை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் 2,644 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,03,620 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதில் மொத்தம் 1,179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல்களில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி மக்கள் மாநாடு மற்றும் சிபிஐ (எம்) உள்ளிட்ட7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த குப்கர் கூட்டமைப்பு, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன.