புது தில்லி: பல முன்னணி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரி, தலைமை நிதியதிகாரி, தலைமை சந்தை மேலாளர் உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் மின்னஞ்சல் முகவரியை, அதன் கடவுச்சொல்லுடன் ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம் வரை கணினி ஊடுருவல்காரர்கள் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இசட்.டி.நெட் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், பல முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஆஃபிஸ் 365 மற்றும் மைக்ரோசாஃப்ட் மின்னஞ்சல் முகவரிகளை தொழில்நுட்பத்தின் வாயிலாக திருடும் சமூக விரோதிகள், அதனை அந்த நிறுவனத்தின் மதிப்பு மற்றும் அதில் அவர்களது பதவியின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு விலையை நிர்ணயித்து விற்பனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு
இந்த தரவுகள் அனைத்தும், ஒரு மறைமுக அமைப்பின் கீழ், ரஷிய மொழி பேசும் வலைத்தள ஊடுருவல்காரர்களுக்காக எக்ஸ்ப்ளாய்ட்.இன் என்றழைக்கப்படும் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் தலைமை செயலதிகாரி, தலைமை நிதித்துறை அதிகாரி, தலைமை சந்தை அலுவலர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பொது மேலாளர், துணை மேலாளர், நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், முக்கிய செயலதிகாரிகளின் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொற்கள் விற்பனை செய்யப்பட்டதை இரண்டு மின்னஞ்சல் முகவரிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளனர்.
அந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும், அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு நடுத்தர மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சில்லறை தொடர் விற்பனை நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரியுடையது என்று தெரிய வந்துள்து.
இதுபோல மின்னஞ்சல்களை விற்பனை செய்பவர், எவ்வாறு தனக்கு இந்த மின்னஞ்சல் தகவல்கள் கிடைக்கப்பெற்றன என்பதை விளக்க மறுத்துவிட்டதோடு, தன்னிடம் இதுபோன்று நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் கடவுச்சொல்லுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு மிகப்பெரு நிறுவன செயலதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் பாதுகாப்பற்ற நிலையை எட்டியிருப்பது, இணையவழிக் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றது என்று தொழில்நுட்பத்துறையில் இருக்கும் அச்சுறுத்தல்களை கண்டறியும் கேளா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ரவீத் லயீப் கூறியிருக்கிறார்.